Related Posts with Thumbnails

அதிரைவரலாறு தளத்திற்கு கட்டுரைகள் அனுப்ப:

adiraihistory@gmail.com

Wednesday, 16 March 2011

லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!

லண்டன்  வட்ட மேஜை மாநாட்டில்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்! 

அதிரை அஹ்மது

 

நமது ஷம்சுல்  இஸ்லாம் சங்கம் எத்தகைய  பாரம்பரியமானது என்பதற்குக்  கீழ்க் காணும் தகவல் ஓர்  எடுத்துக்காட்டாகும்:

நமது சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது.  நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த நேரத்தில்  ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய  நிர்வாகிகளாக இருந்தவர்கள்:


தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)
செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)
பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்

இளைஞரும்  ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு  சிந்தனை முகிழ்த்தது.  'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம்.  அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?'


அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள்.  அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள். 


இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து  வந்த அந்தத் தீர்மானம், நம்  தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது. 


இந்தியச்  சுதந்திரத்தில் நம் அதிரைக்கும்  பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில்  நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.

Read more...

Sunday, 13 March 2011

ஷெய்குனா ஒரு தவ்ஹீத்வாதி! அதிரை அஹ்மது

ஷெய்குனா  ஒரு தவ்ஹீத்வாதி!  அதிரை அஹ்மது

இதற்குமுன்  இந்த 'அதிரை வரலாறு' வலைத்தளத்தில், "முத்துப்பேட்டையின் முத்து; அதிரையின் சொத்து" என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை வாசித்திருப்பீர்கள்.  அந்தக் கட்டுரை நாயகர்தாம், 'ஷெய்குனா' எனும் சிறப்புப் பெயரைப் பெற்ற அதிரைப்பட்டினத்தின் மாமேதை அல்லாமா அஹமது லெப்பை (ரஹ்) அவர்களாவர்.  அன்னார் பற்றிய சில குறிப்புகள் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.  இன்னும் சில அரிய தகவல்கள் அண்மையில் கிடைத்தன.  அவற்றுள் ஒன்றுதான், அன்றையக் கால கட்டத்தில் – அன்னாரின் இளமை முதலே அவர்கள் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையாம் 'தவ்ஹீத்' என்ற அடிப்படையில் உறுதி மிக்க உலமாக்களுள் ஒருவராகத் திகழ்ந்ததுவும், தம் பிறந்தகமான முத்துப்பேட்டையிளிருந்து அதிரைக்குப் புலம்பெயர்ந்ததற்கான காரணமும் அதுவே என்பதும், எனது அண்மைய ஆய்வின்போது தெரிய வந்தது!

      மேற்கண்ட  தகவலை எனக்குத் தந்தவர், ஷைகுனா (ரஹ்) அவர்களின் நெருங்கிய உறவினர்; முத்துப்பேட்டைக்காரர்; நான் ரியாதில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தோழமையானவர்;  ஷைகுனா அவர்களின் உறவினர்; ஷைகுனாவின் மைத்துனர் மகன்; பெயர் செய்யது அஹமது.  அவர் தற்போது மாசி, கடல்பாசி முதலான பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.

      அண்மையில் நானும் அவரும் ஒன்றாகப் பேருந்தில் முத்துப்பேட்டைக்குச் சென்றுகொண்டிருந்தோம்.  பேச்சு வாக்கில், ஷைகுனா அவர்களுக்கு செய்யது அஹமது காக்கா அவர்கள் என்ன உறவு எனக் கேட்டேன்.  மேற்கண்ட உறவு முறையைச் சொன்னார்.  கூடவே, தலைப்பில் காணும் தகவலையும் சொன்னார்.  நான் ஆர்வத்துடன் செவி தாழ்த்திக் கேட்டேன்.

      எனது  முந்தைய கட்டுரையில்  உள்ள விவரப்படி, ஷைகுனா அவர்கள்  வானியல் கலையில்  திறமை பெற்றிருந்ததோடு, இஸ்லாத்தின்  அடிப்படையான 'தவ்ஹீத்' கொள்கையில் மிக  உறுதியானவராகவும் விளங்கியுள்ளார்கள் என்பது, எங்களின் அன்றைய உரையாடல் மூலம் புலப்பட்டது.  தமது பிறந்தகமான முத்துப்பேட்டையில் அடக்கமாகியுள்ள இறைநேசர் ஷைகு தாவூது வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கபுரடியில் நாளுக்கு நாள் 'ஷிர்க்' எனும் இணை வைப்புச் சடங்குகள் கூடி வந்ததை நம் ஷைகுனா அவர்கள் கண்டு, தனிமையில் கண்ணீர் வடித்தார்கள்; போதனை செய்து பார்த்தார்கள்; எச்சரிக்கை செய்தார்கள்; மக்கள் செவி மடுத்ததாகத் தெரியவில்லை!

      அன்னாரின் போதனை ஓர்  அளவை எட்டியபோது, அங்கிருந்த பாமரர்கள்  ஆவேசம் கொண்டனர்!  அடிக்கத் துரத்தினர்!  'இந்த ஊரை விட்டு, அதிரைக்குச்  செல்வதே சிறந்தது' என முடிவெடுத்து, அதிரைக்குப் புலம் பெயர்ந்து அறிவுப் பணியைச் செய்யத் தொடங்கினார்கள்.

     

      இனிவரும்  தகவல்கள், முந்தையப்  பதிவுக்குச்  சற்றே மாற்றமாக இருக்கலாம்.  முந்தையது, 'கீல்-கால்' என்று அரபியில் சொல்வது போன்று, யார் யாரோ சொன்னார்கள்  என்ற செவிவழித்  தகவல்களைச் சான்றாகக் கொண்டு திரட்டிய தகவல்களின் தொகுப்பான 'அதிரை கலைக் களஞ்சியம்'  என்ற மலரின் அடிப்படையில் பதியப்பட்டதாகும்.  ஆனால், தற்போது நான் பதிய வருவது, மேதகை ஷைகுனா அவர்களின் நெருங்கிய உறவினரும் முதியவருமான ஒருவரிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களாகும்.  அதனால், இது ஒரு First-hand Report என்றுகூடச் சொல்ல முடியும்.

      அதிரையில் வந்து அறிவுப்  பணியைச் செய்துவந்த ஷைகுனா அவர்களுக்கு  ஒரு வினோதமான ஆவல் பிறந்தது.  அதாவது, தவ்ஹீதின்  உறைவிடமான சஊதி அரேபியாவுக்குச்  செல்லவேண்டும்  என்ற ஆசை!  எப்படிப் போவது?  சிந்தித்த  ஷைகுனாவுக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றியது.  பயணத்தைக் கட்டினார்கள் பம்பாய்க்கு!  அங்கு சென்றபின் எங்கே தங்குவது?  இருக்கவே இருக்கிறது, 'ஹஜ் கமிட்டி' என்று முடிவு செய்து, பம்பாய் போய்ச் சேர்ந்தபின் அங்கேயே தம் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார்கள்.  என்ன செய்வது?  மார்க்க அறிஞருக்குப் பணியா இல்லை?  தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் அங்கு வரும் ஹஜ்ஜுப் பயணிகளுக்கு ஹஜ் வழிகாட்டல்களைப் பயிற்றுவிக்கும் பணியை மேற்கொண்டார்கள்.

      ஓரிரு ஆண்டுகளின் போதனைப்  பணிக்குப் பின், அன்னாரின் கனவு நனவாகும் விதத்தில், அங்குப் பயணமாகி வந்திருந்த வசதி படைத்த ஹாஜி ஒருவர் தன்னுடன் ஷைகுனாவையும் மக்காவுக்கு அழைத்துச் சென்றார்!  முதலாவதாக மக்காவில் தமது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு, அங்கேயே தங்கி மார்க்கக் கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பை எதிர் நோக்கி இருந்தார்கள்.

      இந்தியாவின் பெருந்தனக்காரப்  பெண்ணான சவ்லத்துன்னிசா பேகம் அவர்களின் பொருளுதவியால் தோற்றுவிக்கப்பட்ட 'சவ்லத்திய்யா மதரசா'வில் சேர்ந்து, மார்க்க உயர்கல்வியைக் கற்கத் தொடங்கினார்கள்.  அங்கேயே 11 ஆண்டுகள் கழிந்தன.  அந்தக் காலகட்டத்தின்போதுதான் மக்காவில் அவர்களின் முதல் திருமணம் நிகழ்ந்திருக்கலாம்.  கல்வி கற்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில், குறிப்பாக ஹஜ்ஜுக் காலங்களில், தமிழ் பேசும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக (முஅல்லிமாக) சேவையும் செய்துவந்தார்கள்.  இறைவனின் விதி, தன் வேலையைச் செய்யத் தொடங்கிற்று! 

      அதிராம்பட்டினத்தில் திருமணம் செய்திருந்த தம் தாய் மாமாவை ஒரு நாள் ஹாஜிகளின் கூட்டத்தில் சந்தித்தார்கள் நம் ஷைகுனா! "அடே!  நீ சேகனாதானே?" என்று வியப்புடன் அடையாளம் கண்டு கட்டிப் பிடித்த மாமாவிடமிருந்து விடுவித்துக்கொள்ள விரும்பாத நம் ஷைகுனா அவர்கள் தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, "ஆமாம்" சொல்லி வைத்தார்கள்.  அந்த மாமாதான் தம் மருகனை வற்புறுத்தி, ஹஜ் கடமை முடித்தபின் தம்முடன் ஊருக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.  இந்தியாவுக்கு வந்து, சென்னையிலிருந்து ஊருக்குத் தம்முடன் வந்த மருமகனை முத்துப்பேட்டை புகைவண்டி நிலையம் வந்ததும் இறங்கச் சொன்னார்கள் மாமா.  தம்மை அவமதித்துத் தமது ஓரிறைக் கொள்கையை ஏற்காத அந்த மண்ணை மிதிக்க அன்னாருக்கு மனமில்லை; அதனால், அங்கு இறங்க மறுத்துவிட்டார்கள்!  எனவே, அதிரைக்கு அவ்விருவரின் பயணம் தொடர்ந்தது.

      அதிரைக்கு வந்து சேர்ந்த  பின்னர், அந்த அரபு நாட்டு மருமகனுக்குத்  தன் மகளை மணமுடித்து வைத்துக் 'கால்கட்டு'ப் போட்டார்கள் ஷைகுனாவின் மாமா! இறுதிவரை அதிரைப்பட்டினமே அவர்களின் தாய் மண்ணாயிற்று.

      அன்று நம் ஷைகுனா ஒரு  வேளை தமது பிற்கால  வாழ்வில் தம்  பிறந்தகத்திற்காக 'துஆ' செய்துமிருக்கலாம்.  அதன் விளைவாக இன்று முத்துப்பேட்டையில் தவ்ஹீது தழைத்தோங்கி வளர்கின்றது!  அல்ஹம்து லில்லாஹ்!

Read more...

Sunday, 6 March 2011

தொட்டியம்பள்ளி – பூர்வீக அதிரை! அதிரை அஹ்மது

இன்று (06/03/2011) ஏ. எல். எம். பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது.  இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நம் 'அதிரை அறிஞர்' புலவர் அஹமது பஷீர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.  விழாவுக்கு முதல் நாளே வந்துவிட்டதால், இருக்கும் நேரத்தை ஒரு பயனுள்ள முயற்சியில் செலவழிக்கலாம் என்ற கருத்தைப் புலவரவர்கள் வெளியிட்டார்கள்.  நாமும் அதை வரவேற்றோம்.  எங்கள் பயணம், ஊரின் மேற்குப் பகுதியை நோக்கித் தொடர்ந்தது! 


"வாருங்கள், 'தொட்டியம்பள்ளி'யைப் பார்த்து  வருவோம்" என்ற புலவரவர்களின்  அன்புக் கட்டளையை ஏற்று, நாம் அதுவரைக் கேட்டிராத அந்தக் கிராமத்தை நோக்கி எமது வாகனம் நகர்ந்தது.  இராஜாமடம் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, ராஜாமடம் ஏரிக்கு முன்னால் வலப்பக்கம் செல்லும் சாலையில் வாகனம் திரும்பிற்று. 


சற்று நேரத்தில், 'தொட்டியம்பள்ளி' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்து, வலப்பக்கம் திரும்பிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.  சிறிது தொலைவு வந்தபின், குடியானவர் ஒருவரைச் சந்தித்தோம்.  அவர் பெயர் தங்கராசு என்பதைக் கேட்டறிந்தோம்.  "ஐயா, இந்த ஊர்தானா, தொட்டியம்பள்ளி?" என்று கேட்டபோது, "ஆமாங்க" என்றார்.  "இங்கு பழைய இடிபாடுகள், கட்டடங்கள். சத்திரம், கோயில் ஏதாவது உண்டா?" என்று கேட்டபோது, 'இல்லை' என்ற பதிலே அவரிடமிருந்து வந்தது. 


"இந்த  ஊரில் வயசானவங்க யாராவது  இருக்காங்களா?" என்று கேட்டபோது, "ஏன் இல்லை?  எங்கம்மாவே  இருக்கே; அதுக்கு இப்போ  நூத்திப் பதினஞ்சு வயசு" என்று அவர் மறுமொழியளித்தபோது, எங்கள் ஆர்வம் கிளர்ந்து எழுந்தது!  அந்த அம்மா இருக்கும் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்தபோது, "இதோ, பக்கத்திலேதான்" என்றார் தங்கராசு.  "உங்களுக்கு அவசரமான வேலையில்லை என்றால், எங்களோடு வந்து அவரைக் காட்ட முடியுமா?" என்றவுடன், ஆர்வத்துடன் அவர் எங்கள் வாகனத்தில் ஏறிக்கொண்டார்.


வண்டி, பட்டுக்கோட்டை-இராஜாமடம் சாலையில் தன் போக்கை மாற்றியது.  "அதோ, அந்த தொறந்த கேட்டுதான்" என்று அவர் சொன்னவுடன், வண்டியை நிறுத்தி, வீட்டினுள் நுழைந்தோம்.  வாசல் திண்ணையிலேயே அந்த அம்மா – செங்கமளம் – வீற்றிருந்தார்.
அந்த  வயதிலும், அவர் தெளிவாகப்  பேசினார்:  "எங்க ஊட்டுக்காரரு மலையாளத்து நாயருங்க.  எப்படியோ இந்த ஊருக்கு வந்தவர், என்னை விரும்பிக் கட்டிக்கிட்டார்.  அப்போ, நானு மைலாங்கோட்டை (மகிழன்கோட்டை) ரயில்வே கேட்டுக்குப் பக்கத்திலே கடை வச்சிருந்தேன்....." என்று அந்தக் கிழவியம்மா சொல்லிக்கொண்டு வந்தபோது, புலவர் பஷீர் அவர்கள், "அட, நீங்கதான் அந்த அம்மாவா?  நான் சின்னப் பையனா இருந்தபோது, எங்கள் குடும்பத்து வயக்காட்டுக்கு அந்தப் பக்கம் வருவேன்; உங்கள் கையால் கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்" என்று வியப்புடன் கூறினார்கள்.


தொடர்ந்த  அந்த மூதாட்டியின் உரையாடலிலிருந்து இன்னும் சில தகவல்களும் கிடைத்தன.  பின்னர் நாங்கள்  அதற்கடுத்த வீட்டில் முஸ்லிம் ஒருவர் வசிப்பதை அறிந்து, அப்பக்கம் நகர்ந்தோம்.  அவர் பெட்டிக்கடை வைத்து நடத்துகின்றார்.  பெயர் அப்துல் காதர்.  பூர்வீகம் பட்டுக்கோட்டையாம்.  அவர் அக்கிராமத்துப் பூர்வீகக் குடிமகன் அல்லர் என்றறிந்த பின்னர், அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியதம்பி என்ற பெரியவரிடம் நாம் வந்த நோக்கத்தைக் கூறி, அவருக்கு ஏதாவது விவரம் தெரியுமா எனக் கேட்டோம்.    


"இந்த ஊர்ல கம்பங்காய் மரைக்கார் என்பவர்தான் முதன்முதலில் குடியேறினார்.  ராஜராஜ சோழன் ஆண்டபோது, அவரிடம் வேலை செய்தவர்.  ஒரு நால் ராஜா இந்தப் பக்கம் வந்தபோது, தன் பேத்தியைத் தோளில் தூக்கி வைத்திருந்த மரைக்காயர், லேசாக அக்குழந்தையின் தொடையைக் கிள்ளி விட்டாராம்.  குழந்தை அழுதது.  "ஏன் குழந்தை அழுகிறது?" என்று ராஜா கேட்டபோது, "தனக்குச் சொத்து வேண்டும் என்று அழுகிறது" என்றார் மரைக்காயர்.  "அப்படியா?  இந்தப் பகுதி முழுவதும் (தொட்டியம்பள்ளியும் தொக்காளிகாடும்) உன் பேத்திக்குத்தான்" என்று மானியமாக எழுதிக் கொடுத்தாராம் ராஜராஜன். 


இவ்வாறு பரம்பரை பரம்பரையாகத் தம்  மூதாதை உதுமான் மரைக்காயர் வழியாகத் தமது குடும்பமான அ. மு. க. குடும்பத்துப் பூர்வீகச்  சொத்தாக அந்தக் கிராமம் முழுவதும் இருந்ததாகவும், தாம் பள்ளி மாணவராயிருந்தபோது அடிக்கடி அப்பகுதிக்கு வந்துபோய்க் கொண்டிருந்தது பற்றியும் புலவர் பஷீர் அவர்கள் கூறியபோது, அதிரைப்பட்டினத்துப் பூர்வீகக் குடிமகன்களுள் அவரும் ஒருவர் என்பது வரலாற்று அடிப்படையில் உறுதியாயிற்று. 
"அதிவீரராம  பாண்டியனுக்கும் இந்தச்  சோழ மண்ணுக்கும் ஏதாவது  தொடர்பு உண்டா?" என்று  கேட்டபோது, "இருக்கலாம்; சில  காலம் இந்தச் சேர சோழ  பாண்டிய மன்னர்கள் பெண் எடுத்துப் பெண் கொடுத்தும், சில காலம் சண்டையிட்டும், ஏதாவது ஒரு தொடர்பில் இருந்துள்ளனர்" என்ற விளக்கமும் கிடைத்தது.
                         -அதிரை வரலாற்றின் ஆய்வு  தொடர்கின்றது.     

Read more...
ங்கு பதியப்படும் வரலாற்று தகவல்களில் மாற்று கருத்து இருப்பின் பின்னூட்டமாக எழுதவும். "அதிரைவரலாறு" நூல்வடிவம் பெறும்போது அவற்றையும் சேர்த்துக்கொள்ளப்படும்.

எவ்வழியே

முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.எனவே,இந்த (அதிரைவரலாறு) தளத்திலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது. தகவலுக்காக சுட்டி வழங்கலாம்.

  © Blogger template AutumnFall by Ourblogtemplates.com 2008

Back to TOP